சத்குரு:

இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல, எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். இந்தியாவில், தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயைக் கூட தாண்டிச் செல்லமாட்டார்கள்.

உங்கள் வாழ்க்கை அனுபவம் உடல்ரீதியானதாக மட்டுமே இருக்கும்போது, மனிதனின் எல்லை தோல் வரை மட்டுமே என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் விதத்தை சற்று விரிவுபடுத்தினால், மனிதனின் எல்லை தோலுக்கு அப்பாலும் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் - அது எந்த அளவிற்கு செல்கிறது என்பது அவர் யார் என்பதைப் பொறுத்தது. நீங்கள் எவ்வளவு அதிகமாக கண்களை மூடி அமர்ந்திருக்கிறீர்களோ, அவ்வளவு "பருமனாகிறீர்கள்", உடல் பருமன் என்ற அர்த்தத்தில் அல்ல - நீங்கள் பெரிதாகிறீர்கள். எவ்வளவு குறைவாக சிந்திக்கிறீர்களோ, உங்கள் இருப்பு அவ்வளவு பெரிதாகிறது.

பெரும்பாலான மக்கள் தூங்கும்போது மட்டுமே தங்களுக்குள் அமைதி மற்றும் சமநிலையின் சாயலை அனுபவிக்கிறார்கள். தூக்கம் தான் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் அறிந்த மிக ஆழமான நிலை. இது வாழ்வதற்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான முறை. அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, ஓரளவுக்கு அமைதியாகவும் சமநிலையிலும் இருக்கிறார்கள். ஆனால் விழித்திருக்கும்போது, அவர்கள் எங்கும் சிதறி இருக்கிறார்கள்.

விழிப்புணர்வாக இருக்கும் மக்கள் மற்றவர்களின் கர்மாவில் தடுக்கி விழவோ அல்லது அதில் நுழையவோ விரும்பமாட்டார்கள். யாரையாவது தாண்டிச் செல்வதன் மூலம், நீங்கள் ஒருவிதத்தில் அவர்களின் கர்மாவிற்குள் நுழைகிறீர்கள்.

ஆகவே, அவர்கள் படுத்திருக்கும் போது, சற்று பெரிதாக இருப்பார்கள். குறிப்பாக நீங்கள் கடினமான ஏதேனும் ஒன்றின் மீது படுத்திருக்கும் போது, நீங்கள் படுத்திருக்கும் பக்கத்தில் சக்தி வெளிப்பட இடமில்லாததால், இயல்பாகவே இடம் உள்ள மேல்பகுதிக்கு சக்தி செல்கிறது. உங்கள் சக்தி உங்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருப்பதற்கு பதிலாக, உங்களுக்கு மேலே 50% முதல் 100% வரை இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீட்டிக்கப்பட்ட சக்தி உடல்

ஒரு கற்பனையாக சொல்வதென்றால், உங்கள் சக்தி உடல் உங்கள் தோலுக்கு அப்பால் ஒரு அடி தூரம் வரை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் படுத்திருந்தால், அது ஏறக்குறைய ஒன்றரை அல்லது இரண்டு அடியாக இருக்கலாம். உங்களுக்குத் தெரியாமலேயே, சக்தி உடலின் சில அளவு சுத்திகரிப்போ அல்லது விரிவாக்கமோ இயல்பாகவே நடைபெறுகிறது. அந்த நேரங்களில், மக்கள் உங்களிடமிருந்து அதிக தூரத்தை கடைப்பிடிப்பார்கள் - மரியாதையால் அல்ல, அந்த தருணத்தில் உங்கள் சக்தி உடலின் அளவின் காரணமாக மட்டுமே.

இது இப்படித்தான் இருக்க வேண்டும் - அந்த குறிப்பிட்ட தருணத்திற்கு இது தேவைப்படுகிறது. உங்களிடம் ஒரு குறிப்பிட்ட உணர்திறன் இருந்தால், இந்த விஷயங்களை நீங்கள் இயல்பாகவே அறிவீர்கள். இது ஏதோ சிறப்பு குணம் என்று நீங்கள் சொல்லலாம் - நான் அதை முழுமையாக மறுக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், மக்களுக்கு இந்த வகையான உணர்திறன் இல்லாததற்கு முக்கிய காரணம், அவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாதது தான். தங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையை அவர்கள் புறக்கணிப்பதால்தான் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.

நான் ஐந்து, ஆறு வயது சிறுவனாக இருந்தபோது, வீட்டில் அமர்ந்து, ஏதோ ஒன்றை அல்லது சில நேரங்களில் எதையுமே இல்லாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, யோகாவில் ஒரு முத்திரை இருப்பதை உணர்ந்தேன், அதில் நீங்கள் வெறுமனே எதையுமே இல்லாமல் உற்றுப் பார்ப்பீர்கள். எதுவும் உயர்ந்ததல்ல, எதுவும் தாழ்ந்ததல்ல. ஏதோ ஒன்றும் எதுவுமில்லாததும் உங்களுக்கு ஒன்றுதான் - நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று, என் அம்மா கடந்து செல்வார். ஆரம்பத்தில், நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் அடுத்த முறை அவர் கடந்து செல்லும்போது, அவர் மங்கலாகவும், சற்று பெரிதாகவும் தெரிவார். அவர் மீண்டும் கடந்து செல்லும்போது, அவர் கிட்டத்தட்ட ஊடுருவக்கூடியவராகவும் (transparent), இன்னும் பெரியவராகவும் தெரிவார்.

பிறகு என் அப்பா வருவார். நான் அவரை வெறுமையான பார்வையுடன் பார்ப்பேன். அவர் என் கண்களுக்கு முன்னால் கைகளை அசைப்பார். எப்போதும் போல, "ஏன் படிக்காமல் இருக்கிறாய்?" என்றோ அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றையோ சொல்லிக்கொண்டிருந்தார். வார்த்தைகள் என் காதில் விழவில்லை, நான் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன், எல்லா விதமானவற்றையும் கண்டேன். நான் பார்த்த வடிவங்களைப் பொருத்து, அவர் என்ன சொல்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். இந்த பையன் இப்படி வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, இவன் மனநலனை இழந்து வருகிறான் என்று கவலைப்பட்டார். நீங்கள் போதுமான கவனம் செலுத்தினால், இதையே நீங்களும் அனுபவிப்பீர்கள்.

உங்களைச் சுற்றிலும் என்ன இருக்கிறது?

யோக உடலியலில், உங்கள் இருப்பின் மூன்று உடல் பரிமாணங்கள் உள்ளன - பௌதீக உடல், மன உடல், மற்றும் சக்தி உடல். அதாவது அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம். பௌதீக உடல் என்பது உணவு வடிவத்தில் கிரகத்திலிருந்து நாம் எடுக்கும் பௌதீக மூலப்பொருட்களால் ஆனது. மன உடலும் கூட உங்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களால் ஆனதே, ஆனால் இந்த மூலப்பொருள் மிகவும் நுண்ணியது. நாம் மன உடலை தகவல்கள், அதிர்வுகள், ஒலிகள் மற்றும் பதிவுகளால் கட்டமைக்கிறோம்.

மற்றவர்களின் விஷயங்களை எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல, ஏனெனில் உங்கள் சொந்த விஷயங்களைக் கையாளுவதே போதுமான அளவு சவாலாக இருக்கிறது.

உடல் பௌதீக பொருட்களால் ஆனது என்பதால், அது ஓரளவு சரியான வடிவத்தைப் பெறுகிறது. பெரும்பாலான மக்களின் மன உடலுக்கு தெளிவான வடிவம் இல்லை. அவர்கள் என்ன சேகரித்துள்ளார்கள் என்று கூட அவர்கள் விழிப்புணர்வாக இல்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு, 1% பதிவுகள் கூட விழிப்புணர்வாக இல்லை. 99% விழிப்பற்ற நிலையில் சேகரிக்கப்படுவதால், மனதின் கட்டமைப்பு சிதறியுள்ளது. அது ஒருவித குழப்பமே. உங்கள் மன வடிவத்திற்கு ஒரு விழிப்புணர்வான கட்டமைப்பை உருவாக்க முடிந்தால், மற்றும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப அந்த கட்டமைப்பை மாற்ற முடிந்தால், உங்கள் மனம் ஒரு அற்புதமான மாயக் கருவியாக இருக்கும்.

உங்கள் சக்தி உடலும் தகவல்களை சுமக்கிறது. அது எந்த வடிவத்தை எடுக்கிறது என்பது உங்களுக்குள் எந்த வகையான தகவல்கள் உள்ளன என்பதைப் பொறுத்தது. உடல்ரீதியான அளவில் உள்ள தகவல்கள் மரபியல் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், மன அமைப்பிலும் தகவல்கள் உள்ளன, சக்தி அமைப்பிலும் தகவல்கள் உள்ளன.

விழிப்புணர்வாக இருக்கும் மக்கள் உங்கள் மன உடலையோ அல்லது உங்கள் சக்தி உடலையோ தாண்டிச் செல்ல விரும்பமாட்டார்கள். ஒருவர் எந்த விதமான கர்மாவைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் தூங்கும்போதோ அல்லது தூங்கப் போகும் தருணத்திலோ, கர்ம கட்டமைப்பின் விழிப்புணர்வற்ற வெளிப்பாடு அதன் உச்சத்தில் இருக்கும். ஏனெனில் நீங்கள் எந்த விழிப்புணர்வான செயல்பாடுகளையும் செய்யாததால், விழிப்புணர்வற்ற செயல்பாடு முழு அளவில் இருக்கும். விழிப்புணர்வாக இருக்கும் மக்கள் மற்றவர்களின் கர்மாவில் தடுக்கி விழவோ அல்லது அதில் நுழையவோ விரும்பமாட்டார்கள். யாரையாவது தாண்டிச் செல்வதன் மூலம், நீங்கள் ஒருவிதத்தில் அவர்களின் கர்மாவிற்குள் நுழைகிறீர்கள்.

உங்களுடைய "விஷயங்களை" கையாளுதல்

மற்றவர்களின் விஷயங்களை எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல, ஏனெனில் உங்கள் சொந்த விஷயங்களைக் கையாளுவதே போதுமான அளவு சவாலாக இருக்கிறது. இதனால்தான் நீங்கள் ஆன்மீக சாதனாவில் ஈடுபடும்போது, ஒரு பிரம்மச்சாரியாக, நீங்கள் யாரையும் கட்டித்தழுவக்கூடாது - "நமஸ்காரம்" செய்வதே போதுமானது.

உங்கள் கர்மாவில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அது நல்லதோ கெட்டதோ, அதை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. உங்கள் குரு உங்கள் குறிப்பிட்ட கர்மாவுக்காக ஒரு யுக்தியை உருவாக்கியிருக்கும்போது, நீங்கள் அதை எல்லா வகையான மக்களுடனும் கலக்கக்கூடாது. இல்லையெனில், அது தேவையற்ற முறையில் சிக்கலாகிவிடும்.

நீங்கள் எல்லா இடங்களிலிருந்தும் அதிகமானவற்றை உள்வாங்கினால், கர்ம செயல்முறை மிகவும் சிக்கலானதாக மாறிவிடும். மேலும் உங்கள் கர்மாவிற்காக உருவாக்கப்பட்ட யுக்தி, நீங்கள் அதை மற்றவர்களுடையதுடன் தொடர்ந்து கலந்துகொண்டே இருந்தால் வேலை செய்யாது. தீவிர சாதனாவில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏன் தனிமையான குகையிலோ அல்லது அதுபோன்ற இடங்களிலோ தங்களை தனிமைப்படுத்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் விஷயங்களை சிக்கலாக்க விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சொந்த கர்மாவின் சிக்கலை புரிந்துகொண்டு, அதை மேலும் சிக்கலாக்க விரும்புவதில்லை.

அதனால்தான் நீங்கள் யாரையும் தாண்டிச் செல்லக்கூடாது. நீங்கள் அவர்களைச் சுற்றிச் செல்லலாம். இது மரியாதையின் அடையாளமும் கூட. அதுமட்டுமல்லாமல், நீங்கள் அவர்களைத் தாண்டிச் சென்றால் அது அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். நீங்கள் அவர்களின் சக்தி உடலைத் தொந்தரவு செய்தால், அவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ளாமல் போகலாம், ஆனால் உள்ளளவில் அது அவர்களைப் பாதிக்கும்.

இது எல்லாமே வாழ்வைப் பற்றிய அடிப்படையான புரிதலில் இருந்து வருகிறது. நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் - தொழிலை நடத்தினாலும், திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைகளைப் பெற்று வளர்த்தாலும், போரில் ஈடுபட்டாலும் - இந்த மண்ணில் பிறந்த எவருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்தான் இருந்தது - உச்சபட்ச விடுதலை. முக்தி மட்டுமே குறிக்கோளாக இருந்தது. இந்த முழு கலாச்சாரமும் இதைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருந்தது. மற்றவர்களின் கர்மாவில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு பல யுக்திகள் உருவாக்கப்பட்டன. உங்களிடம் ஏற்கனவே இருப்பதன் சிக்கல்கள் தெரிந்திருப்பதால், புதிதாக எதையும் பெற நீங்கள் விரும்புவதில்லை. உங்கள் சொந்த புதிரை நீங்கள் விடுவித்துக்கொண்டால் அதுவே போதுமானது. அதை மேலும் சிக்கலாக்க நீங்கள் விரும்புவதில்லை.

குறிப்பு:

சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.